செவ்வாய், 10 மே, 2011

என் பழைய நினைவுகள் : தொடக்கம்


 வணக்கம்,  என் சின்ன வயசுல என்னை பாதிச்ச மகிழ்ச்சியான தருணங்கள், வருந்தவைத்த நிகழ்வுகள், நான் விளையாடிய, கிராமங்களில் மட்டுமே இருக்கக்கூடிய விளையாட்டுகள் என பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்பதிவை ஒரு தொடர் போல எழுதலாமுன்னு நெனச்சிருக்கேன். ஒவ்வொரு பதிவும் ஒரு சிறுகதை போல இருக்கும். உதாரணமாக சில தலைப்புகள் :

நாய் வேட்டை :
எனது வருத்தம் :
என் தாத்தாவில் மரணம் :
வில் போட்டி :
உண்டி வில்(கவன் கல்) போர் :
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி :
ஐந்தாம் வகுப்பில் அடி வாங்கியது :
உயிர் தப்பியது :
விளையாட்டுகள் :
        உஸ்காபெரி :
        இட்டெல்லாம் பெட்டி  :
        ஓட்டடி அடிக்கறது :
வெங்கடாம்பேட்டை பெருமாள் கோயில் கோபுர தரிசனம் :
...
        இப்படி பல தலைப்புகளை என் சிறுவயது முதல் இன்று வரை யோசிச்சு வச்சிருக்கேன். நான் எழுத்துலகிற்கு புதியவன் என்பதால் எந்த அளவிற்கு சுவாரசியமாகவும் இனிமையாகவும் எழுதுவேன் எனத் தெரியாது மேலும் எழுத்துப் பிழை ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.  தயவு செய்து என் பிழைகளை பொருத்தருள வேண்டுகிறேன்.

         மேலும் அன்பின் சுய வரலாற்றில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையே, இவற்றில் சந்தேகங்களுக்கு துளியும் இடமில்லை.

அன்பின் சுய வரலாறு : என் பாவச் செயல்

           என்னடா எடுத்த உடனேயே பாவச்செயல்னு தலைப்பிட்டு ஆரம்பிக்கிரானு பாக்கிறீங்களா.. அது ஒன்னுமில்லைங்க, நான் செஞ்ச இந்த வேலை அடிக்கடி என் ஞாபகத்துக்கு வரும் ரொம்ப வருத்தமா இருக்கும். அறியாத வயசுல தெரியாம செஞ்சதா இருந்தாலும் அது என்னமோ எனக்கு உறுத்தலாவே இருக்கு.
            அப்படி என்னதான் பண்ணினேன்னு கேட்டிங்கனா.. சிரிப்பீங்க.. அது உங்களுக்கு சிரிப்பாதான் இருக்கும் ஆனா எனக்கு அது ரொம்ப வருடங்களாகவே வருத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
              இந்த சம்பவம் நடந்தது நான் நாலாவது படிக்கும் போது. என்னை பாதித்த பல சம்பவங்கள் இந்த ஆண்டில் தான் நடைபெற்றன. சரி சம்பவத்துக்கு வருவோம்.
               ஒரு நாள், அன்று பள்ளி விடுமுறை ஞாயிற்று கிழைமையா சனிக் கிழைமையா எனத் தெரியவில்லை. மதிய வேளை விளையாடுவதற்கு எங்கள் தெருவில் யாருமே இல்லை. தனியாக இருந்தேன். பகலிலே எனக்கு தூக்கம் வராது அதே சமயம் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கவும் என்னால முடியாது. எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு பாட்டி வீடு கட்டி தங்கியிருந்த பொட்டல் நிலம் இருக்கும்(வீடு இல்லை காலி நிலம் மட்டுமே).
                அந்த இடத்தில் தான் அச்சம்பவம் நடந்தேறியது. நான் கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தேன்.தடியின் நீளம் சுமார் மூன்றரை அடி இருக்கும். எங்கள் வீட்டிற்குப் பின்னால் அப்பொட்டல் நிலமருகே தொடர்ச்சியாக கருநொச்சி செடிகள் இருக்கும். அக்கருநொச்சி செடிகளின் அடிவாரத்திலேதான் ஆரம்பித்தது சம்பவம்..
                  நான் தடியுடன் அப்பக்கம் வரும்போது எதேச்சையாக அவைகளை காண நேரிட்டது. குடும்பத்தோடு குதூகலமாய் இருந்தன.
                  எங்கள் தெருவில் எல்லா சிறுவர்களுக்கும் உடனேயே அடிப்பதுதான் எங்களின் முதல் வேலையே. நானும் அதனை அப்படியே பின்பற்றினேன். எண்ணிக்கையில் அவை ஏழு அல்லது எட்டு இருக்கும்.
                 ஒன்று கூட தப்பிவிடாதபடி அனைத்தையும் வளைத்து வளைத்து அடித்தேன். அவற்றின் சிறுநீர் மேலே பட்டால் சொரி வந்துவிடும் என்பார்கள். அதற்க்கெல்லாம் அஞ்சியவனாக நான் இல்லை. பொதுவாக இவற்றை அடித்தே கொல்லுவதுதான் வழக்கம்.

ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் செய்த அந்த செயல் அதுதான் இத்தனை வருடங்களாக இப்படி வருத்தப்பட்டு கொண்டிருப்பதற்க்கு காரணம்.இந்த சம்பவத்திற்கு முன்பு பலவற்றை அடித்தே கொன்றிருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் என் மனதை பாதிக்கவில்லை.
                 ஒருவழியாக அவைகள் எங்கும் தப்பி ஓடாதபடி குற்றுயிரும் கொலையுயிருமாக அடித்துப்போட்டுவிட்டேன். சரி அடுத்து என்ன செய்யலாம் எப்படி கொல்லலாம் என யோசித்த போதுதான் என் சிந்தையில் சட்டென தட்டியது ஒரு பொறி. சுற்றும் முற்றும் தேடினேன் குழி பறிப்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று. கிடைத்தது சற்று வலுவான குச்சிகள். குழி தோண்ட ஆரம்பித்தேன். அச்சமயம் பார்த்து ஒன்று மட்டும் துள்ளி தாவி மறைவதற்கு முயற்ச்சிப்பதை கண்டேன். சட்டென எழுந்து என் கையில் இருந்த தடியால் மண்டையிலேயே ஒரு போடு போட்டேன். மல்லாந்து விழ்ந்தது. அதன் தொண்டையும் வயிறும் மாறி மாறி துடித்தன.
          பின் மீண்டும் குழியை தோண்ட ஆரம்பித்தேன். இறுதியாக குழியும் தோண்டி முடிக்கப்பட்டது.
                    நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் நான் அவற்றை குழியில் போட்டு புதைக்கப்போகிறேன் என்று, அதுதான் இல்லை. மாறாக வேறொன்றை செய்தேன்.அப்படி புதைத்திருந்தாலும் என் மனம் ஆறியிருக்கும் என நினைக்கிறேன். அருகிலே கிடக்கும் காய்ந்த குச்சிகளை பொறுக்க ஆரம்பித்தேன்.பின்னர் எதோ யோசித்தவனாய் வீட்டிற்கு சென்று தீப்பெட்டி எடுத்துவந்தேன். அரை அடி ஆழம் தோண்டப்பட்ட அந்த குழியில் முதலில் இருண்டு சிறிய குச்சிகளை போட்டேன். பின் அவற்றின் மேல் நான் அடித்து துவம்சம் செய்து போட்டு வைத்திருக்கும் உயிர்களில் சிலவற்றை வைத்து, அவற்றின் மேல் மேலும் சில குச்சிகளை வைத்து பிற உயிர்களையும் அதன் மேல் இட்டு அடியில் கொளுத்த ஆரம்பித்தேன். 

அந்த அளவிற்கு ஒன்றும் சரியாக கொழுந்துவிட்டு எரியவில்லை. அதற்குமேல் அந்தவிளையாட்டை விளையாட பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டேன்.
 
                     இரண்டு மூன்று  நாட்கள் கழித்து, நான் கொன்று போட்டவைகளின் நிலை என்னவென பார்க்க அவ்விடம் நோக்கி வந்தேன். மூன்று உயிர்கள் மட்டுமே காய்ந்த நிலையில் இறந்து கிடந்தன.
                       இப்படி என்னால் மிகக் கொடூரமான வன் கொடுமைகளுக்கு ஆளான அவ்வுயிர்கள் "தவளைகள்".

தொடரும் என் வரலாற்று நினைவுகள்... அன்புடன் அன்பு.

சனி, 29 ஜனவரி, 2011

எனது ஊர் (My Village)


கீழூர்
முன்னுரை :-
                     வணக்கம் நான் எனது கிராமத்தை பற்றி சிலவற்றை இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எங்கள் ஊர் முந்திரிகாடுகளாலும் விவசாய நிலங்களாலும் சூழப்பட்ட ஒரு முழுமையான கிராமம். மேலும் இது கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் கீழூர் ஊராட்சியும் ஒன்று. கீழூர் ஊராட்சியின் கீழ் ஆயிப்பேட்டை, பாச்சாரப்பாளையம், பெரிய கோயில் குப்பம், சின்ன கோயில் குப்பம்,பெருமத்தூர், புது பெருமத்தூர் ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன. நகர் புறங்களிலிருந்து வருபவர்களால் கிராமிய மணத்தையும், பண்பாட்டு உணர்வையும், விவசாய நெடியையும் எளிதில் நிச்சயமாக எங்கள் கிராமத்தில் உணர முடியும் உணர முடியம்.

பண்பாட்டு விழாக்கள் :- 
                        எங்கள் ஊரில் அனைத்து கிராமங்களைப் போலவே ஆடி மாதம் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊற்றுவதும் சாமி சிலைகள் வீதி உலா வரும் ஒரு விழாவும், கார்த்திகை மாதம் மூன்றாம் வெள்ளி அல்லது இறுதி வெள்ளியன்று மாவிளக்கு, கொழுக்கட்டையுடன் சென்று படைத்துவிட்டு வரும் ஒரு விழாவும்தான் நாங்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள்.
                        சாமி வீதி உலா வருவது என்பது எனக்கு நினைவுதெரிந்த நாட்களிலிருந்தே நடைபெறுவதில்லை. அது எங்கள் ஊரில் உள்ள இரு குடும்ப வம்சாவழிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதையினால் ஏற்ப்பட்ட சண்டையினால் தடைப்பட்டு போயுள்ளதாக என் அம்மா கூற கேள்விப்பட்டேன்.
                        எங்கள் ஊரின் இந்த ஆடி மாத விழா தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். இம்மூன்று நாட்களும் இரவு நேரங்களில் கண்டிப்பாக தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும். பெரும்பாலான கிராமங்களில் அழிந்தே போய்விட்ட இது வருடாவருடம் எங்கள் உயிர்ப்பெருவதை சற்று பெருமையாகவே பார்க்கிறேன்.


மக்களின் தொழில் :-
                       எங்கள் ஊரின் பெரும்பாலான மக்கள் ஏறக்குறைய 85%  கூலித் தொழிலாளிகளாகவும் விவசாயிகளாகவும் இருக்கிறார்கள்.ஏனையோர் அருகிலுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தற்க்காலிக பணியாளர்களாக வேலைபார்க்கிறார்கள். மேலும் மற்றபிற கிராமங்களைப்போலவே விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் மூலமாகவும், பெரிய ஒப்பந்ததாரர்களாக இருப்பதன் மூலமாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளனர்


இயற்கை வளங்கள் :-
            மண்வளம் :-
                                 மண்வளம் : செம்மண். வெயில் காலங்களில் புழுதி கொடிகட்டி பறக்கும் பொட்டல் மண் தான் எங்கள் ஊர் முழுமையும்.
            நீராதாரம் :-
                ௧) குடிநீர்:
                                 அரசாங்கத்தால் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி கட்டிக்கொடுக்கப்பட்டாலும், தெருவிற்கு இரண்டு அல்லது மூன்று குழாய்கள் மட்டுமே இருப்பதால் பெரிதாக எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை மேலும் சரியான பராமரிப்பு இல்லாததால் குழாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் வராது அப்படியே வந்தாலும் அது சகதியுடன் வரும். அதனால் அது குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. 
                                கிராமம் என்பதால் தெருவிற்கு இரண்டு மூன்று கிணறுகள் இருக்கும். மேலும் விவசாயம்தான் பிரதான தொழில் என்பதால் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் வசதி படைத்தோரால் அமைக்கப்பட்டிருக்கும்.
                               ஆகவே கிணறுகளும் ஆழ்துளை கிணறுகளும்தான் குடிநீர் வாழ்வாதாரம்.
                ௨) பாசன நீர் :
                                எங்கள் ஊரின் விவசாயத்திற்கான மிகப்பெரிய நீராதாரங்கள் இரண்டுதான். அவை : [௧]. சோழன் ஏரி [௨]. ஆழ்துளை கிணறுகள். இவை இரண்டையும் மழையையும் நம்பியே எண்களின் விவசாயம் உள்ளது.
                ௩) குளம் :
                                 நீங்கள் எங்குமே குளம் இல்லாத ஒரு கிராமத்தை பார்க்க முடியாது. எங்கள் ஊருக்கும் ஒரு குளம் உண்டு. ஆதிகாலத்தில் குடிநீருக்காகவும், பிள்ளையார் கொவிளுக்காகவும் வெட்டப்பட்ட குளம் இன்று மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை பெருக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


விவசாயம் :-
               நிலக்கடலை , மரவள்ளி கிழங்கு, பன்னீர் கரும்பு, சக்கரை கரும்பு, வாழை, நெல்,உளுந்து, துவரை, கம்பு மற்றும் எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் நிலக்கடலையும், வாழையும், கரும்புமே அதிகமாக பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கு அடுத்தப்படியாக எள்ளும், கம்பும் அதிகமாக பயிரிடப்படுகிறது.பெர்ம்பாலும் உளுந்து நிலக்கடலையுடன் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது.
              மேலும் இவற்றின் நிலப்பரப்பிற்கு இணையாக முந்திரிக்காடுகள் இருக்கின்றன. ஆனால் பெருகிவரும் மக்கள்தொகையாலும் விலைவாசி ஏற்றத்தாலும் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு மனிதன் செயல்படுவதால் இம்முந்திரிக்காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாறிக்கொண்டு வருகின்றது.(மேலும் நெய்வேலி அருகே உள்ள முந்திரிக்காடுகள் பெரும்பாலானவை வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கான்க்ரீட் காடுகளாக காட்சியளிக்கின்றன.)



கல்வி :-
               ஒன்று முதல்  ஐந்து வரையிலான வகுப்புகளைக்கொண்ட துவக்கப்பள்ளிதான் எங்கள் ஊரின் கல்வி நிலையம். " ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கீழூர் ". இதுதான் என்னை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்ப்பாலும், சுயசிந்தனையும் ஊட்டி வளர்த்த என் பள்ளி.
               ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டுமானால் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி மற்றும் வடலூர் ஆகிய நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பை தொடர வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் குறிஞ்சிப்பாடிக்கு சென்றுதான் படித்தோம். இப்போதும் அதிகமானோர் படிக்க செல்வது குறிஞ்சிப்பாடிக்குதான்.
                எங்கள் ஊர் மட்டுமல்லாது சுற்றுவட்ட கிராமங்கள் அனைத்துமே கல்வியில் சற்று பின்தங்கிதான் இருக்கிறது.எங்கள் ஊரின் கல்வி இன்றைய இளையத்தலைமுறையினரால்தான் சற்று ஓங்கிய எழுச்சி கண்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்களின் வம்சத்தின் முதல் பட்டதாரி இன்றைய இளைய தலைமுறையினர்தான். ஆனாலும் பாதிக்கு இணையான இளையோர் சரியான விழிப்புணர்வு இல்லாமலும், பள்ளிக்கல்வியை பாதியிலேயே கைவிட்டும், வறுமையினால் மேற்ப்படிப்பை தொடங்க முடியாமலும், தொடர முடியாமலும் இருப்பது வேதனையான விடயம்தான்.



சுகாதாரம் :-
                  எங்கள் ஊராட்சிக்கான ஆரம்ப சுகாதார நிலையம் எங்கள் ஊரில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவிலுள்ள பாச்சாரப்பாளையம் கிராமத்தில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்ற போதிலும் அது எங்கள் ஊரின் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி போல் சரியான பராமரிப்பும், அக்கறையும் இல்லாமல்தான் இருக்கிறது.                 
                   மற்றபடி எந்த ஒரு சுகாதார அடிப்படை வசதிகளும் எங்கள் ஊருக்கு கிடையாது.



போக்குவரத்து :-
                   எங்கள் ஊருக்கு  தமிழக அரசால் ஏற்ப்படுத்திதர முடியாத ஒரு போக்குவரத்து வசதியை இராமவிலாஸ் என்ற தனியார் பேருந்து நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏற்ப்படுத்தி தந்தது. அப்பேருந்து ஒரு நாளைக்கு ஆறு முறை சிதம்பரத்திலிருந்து பண்ருட்டிக்கும், பண்ருட்டியிலிருந்து சிதம்பரத்திற்கும் எங்கள் ஊரை கடந்து செல்லும்.
                    மாணவர்களுக்கு இலவச பயண அட்டை கொடுத்ததாலேயோ என்னவோ காலையில் எட்டுமணியைப்போல் ஒரு அரசு பேருந்து வரும். அது பெருமத்தூர், கீழூர், பாச்சாரப்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி விரையும். மாலையில் ஐந்து மணிபோல் குறிஞ்சிப்பாடிக்கு அப்பேருந்து வரும்.வராமலும் போகலாம். அப்படி வராத நாட்களில் நடந்துதான் வரவேண்டும். இப்படித்தான் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
                     இராமவிலாஸ் பேருந்து நிறுத்தப்பட்ட பின்பு எங்கள் ஊர் பேருந்து போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் ஒரு 1 மணி நேர சாலைமறியலுக்குப்பின் எங்கள் ஊரின் கோரிக்கை அரசின் காதுகளுக்கு சென்று தற்போது மதியம் 1 .10 மணியளவில் பண்ருடியிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு விரையும் பேருந்து எங்கள் ஊரை கடக்கும். அதே பேருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் குறிஞ்சிப்படியிளிருந்து திரும்பி பண்ருட்டி நோக்கி நகரும்போது எங்கள் ஊரை கடக்கும்.
                     இடையில் பாச்சாரபாளையம் வரை வந்து செல்லும் சிற்றுந்து எங்கள் ஊருக்கும் நீண்டிருந்தது. ஆனால் அதுவும் இப்போது தடைப்பட்டுள்ளது.


வழித்தடங்கள் :-
                     வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் ஊர் அமைந்துள்ளது.
           வடலூரிலிருந்து : 
                      கும்பகோணம் - சென்னை சாலையில் வடலூரிலிருந்து  பண்ருட்டி நோக்கி (சென்னை) ஒரு ஐந்து கி.மீ பயணித்தால் வடகுத்து எனும் கிராமம் வரும். அவ்வூரிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு மைல் கல் தூரம் நகர்ந்தால் எங்கள் ஊரை அடையலாம்.
          நெய்வேலியிலிருந்து :
                      நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து(2 கி.மீ ) இந்திரா நகரை அடைந்து அங்கிருந்து (சென்னை - கும்பகோணம் சாலை ) வடலூரை நோக்கி ஒரு கி.மீ பயணித்தால் வடகுத்து கிராமத்தை அடையலாம். அங்கிருந்து நான் ஏற்கனவே சொன்னதுபோல கிழக்குநோக்கி இரண்டு மைல் சென்றால் எங்கள் ஊர் வரும்.
          குறிஞ்சிப்பாடியிலிருந்து :
                       குறிஞ்சிப்பாடியிலிருந்து வடக்கு திசை நோக்கி மீனாட்சிப்பேட்டை(கிராமம்) வழியாக கன்னித்தமிழ்நாட்டை(கிராமம்) அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் சென்றால் பாச்சாரப்பாளையம் கிராமத்தை அடுத்ததாக எங்கள் ஊர் வரும்.


மதங்கள் :-
                      எங்கள் ஊரில்  ஒரே ஒரு இஸ்லாமிய குடும்பத்தை தவிர்த்து மற்ற அனைவரும் இந்து மதத்தை சார்ந்தவர்களே.


சமூகம் :-
                       வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.இங்கு வன்னியர்கள்  நயினார்,படையாட்சி என இரு சாதிப்பிரிவுகளாக உள்ளனர். இங்கு வசிக்கும் வன்னியர்களில் நான்கில் ஒரு பங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்களை தவிர்த்து இரண்டு செட்டியார் குடும்பங்கள் இருக்கின்றன.


திருத்தலங்கள் :-
                       பொதுப்படையாக  சொல்லும்படியாக இரண்டே இரண்டு கோவில்கள் தான் இருக்கின்றன. ௧.பிள்ளையார் கோயில், ௨.மாரியம்மன் கோயில். மாரியம்மன் கோயிலின் சிறப்பு அங்கிருக்கும் தலை மட்டுமே உள்ள மாரியம்மன் கற்ச்சிலையானது சுயம்பு என்பதே ஆகும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அக்கோவில் பாழடைந்த கோவிலாகவே உள்ளது.
                       இவற்றைத்தவிர பெரியாண்டவர் கோயில், பாவாடைராயன் கோயில், வீரன் கோயில் என ஒரு சில குலதெய்வ கோவில்களும் உள்ளன. இதில் பெரியாண்டவர் கோயில் எங்களின் குல தெய்வமாகும். இக்கோயில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு ஐந்து ஏக்கர் அளவில் வளர்ந்துள்ள காட்டிற்கு நடுவில் உள்ளது.


அரசியல் கட்சிகள் :-
                        அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, காங்கிரஸ்,பா.ம.க, வி.சி ஆகிய கட்சிகள் எங்கள் ஊரில் இடம்பெற்றுள்ளன. இவைகளின் செல்வாக்கும் நான் எழுதியிருப்பதைப் போலவே இருக்கிறது.தற்ச்சமயம் தே.மு.தி.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செல்வாக்கு குறைந்து பா.ம.க விற்கும், அதற்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க விற்கும் உயர்ந்துள்ளது.


முடிவுரை :-
                      என்னுடைய கிராமத்தைப்  பற்றி நான் அறிந்த அளவில் பதிந்திருக்கிறேன். இக்கட்டுரையில் நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து குறிப்பிடுங்கள். இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை, மனம் நோகும்படி என ஏதேனும் எழுதியிருந்தால் என்னைத்திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.