திங்கள், 13 ஜனவரி, 2014

கட்டபொம்மனுக்கு ஏன் பிற பாளையக்காரர்கள் உதவவில்லை..!?



கட்டபொம்மனுக்கு ஏன் பிற பாளையக்காரர்கள் உதவவில்லை..!? கட்டபொம்ம நாயக்கனின் இன்னொரு முகம்.

கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்றை படிக்கும்போது கட்டபொம்மனுக்கு உதவாத பிற பாளையக்காரர்கள் மீது கண்டிப்பாக நமக்கு வெறுப்புணர்ச்சி எழுந்திருக்கும். கிட்டதட்ட பிற பாளையங்கள் அனைத்தும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிவில்லாமல் இருந்தார்கள், கட்டபொம்மனுக்கு மட்டுமே அத்தகைய துணிவிருந்தது என்கிற மாதிரியாக கட்டபொம்மன் வரலாற்று கதைகள் அனைத்துமே அமைந்திருக்கும். 

போதாகுறைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், கட்டபொம்மன் இருந்திருந்தால் “உண்மையிலேயே என்னால் கூட இந்த அளவிற்க்கு சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது, அவ்வளவு அருமையாக நடித்துள்ளீர்கள்” என பாராட்டியிருப்பார். அவ்வளவு தத்ரூபமாக அத்துனை பேரையும் உடல் சிலிர்க்க வைத்து நடித்துவிட்டார்.

கட்டபொம்மன் ஆட்சி செய்தது குறுகிய பகுதிகளை மட்டுமே. பாஞ்சாலங்குறிச்சியை விட பெரிய பெரிய பாளையங்கள் இருந்தன. அவற்றை ஆட்சி செய்தவர்கள் கட்டபொம்மனை விட பல மடங்கு பலம் பொருந்திய வீரர்களாக இருந்துள்ளார்கள். இருப்பினும் ஏன் இவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து கட்டபொம்மனுக்கு உதவவில்லை..!!? கட்டபொம்மன் கதையை படிக்கும்போது பிற பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க பயந்தார்கள் என மொட்டையாக ஒரு காரணம் நமக்குள்ளே தானாகவே தோன்றியிருக்கும்.

அதுமட்டுமில்லாது “வீரபாண்டிய கட்டபொம்மன்” தொடங்கி கற்பனை அரசன் “இம்சை அரசன் 23ம் புலிகேசி” வரைக்கும் ஆங்கிலேயரை ஆதரிப்பவர்கள் கட்டபொம்மனின் பேரைக்கேட்டாலே அஞ்சுவர் என்பது மாதிரியான மாயையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அப்படி அல்ல. உதாரணமாக, கட்டபொம்மன், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள் அரண்மனைக்கு சென்றால் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கும்பிட்டுவிட்டுதான் எழுந்து பேச முடியுமாம். நிலை இப்படி இருக்கும்போது கட்டபொம்மன் பேரை கேட்டவர்கள் அனைவரும் அஞ்சினர் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அப்படிதான் இங்கு திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி தலைப்புக்கு வருவோம். ஏன் மற்ற பாளையக்காரர்கள் கட்டபொம்மனுக்கு உதவவில்லை..!? எனக்கு இரு பாளையக்காரர்களை பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது.

முதலில் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களைப் பற்றிய செய்தியை காணலாம். அப்போது அப்போது ஏழாயிரம் பண்ணை திவான் சமூகத்தவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. ஏழாயிரம் பண்ணை அரசராக முத்துசுவாமி ஆண்டுகொண்டார் அவர்கள் இருக்கிறார்.

ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். தலைமுறை தலைமுறையாக பாண்டியனின் அரசவைக்கு சென்றால் பாண்டியன் தன் அரியனைக்கு இணையான ஆசனத்தில் அமரவைத்து மரியாதை கொடுத்து பேசுவதுதான் வழக்கம். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள்.

இவ்வாறான சிறப்புகளோடு சிறப்பாக ஆட்சி செய்து வரும்போது, அதுவரை ஏழாயிரம் பண்ணை பாளையக்காரரை கும்பிட்டு கைகட்டிக் கொண்டு நின்றிருந்த பாஞ்சாலங்குறிச்சி  கட்டபொம்ம நாயக்கர், கும்பிடும் பழக்கத்தை நிறுத்தித் தமக்குப் பாளையக்காரரோடு சமமாக அமர அனுமதி வழங்கவேண்டுமென்று ஆள் அனுப்பி பேசி வரும்படி செய்கிறார். ஆனால் அரசர் அதனை ஏற்க மறுத்துவிடுகிறார்.

இம்மரியாதையை வலுக்கட்டாயமாக பெற எண்ணிய கட்டபொம்மன், அப்போது தெற்குச் சீமைக்கு வந்திருந்த  பாருகானிடம் சிறிது பணம் கையூட்டாக கொடுத்து, தாம் ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்ளப் போவதாகவும், அது குறித்து அப்பாளையக்காரர் முறையிட்டால், பாருக்கான் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டுமென கேட்டு தனக்கு பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார் கட்டபொம்மன்.

தனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட கட்டபொம்மன் தனது சேனையுடன் வந்து ஏழாயிரம் பண்ணை பாளையத்தை சேர்ந்த சில கிராமங்களில் கொள்ளையிட்டு, மக்களை குத்தி, வெட்டி அனேக உயிர்களை வதை செய்துவிட்டுப் போகிறார்.

சேதி அறிந்து மனம் நொந்த அரசர், திவான் சமூகத்துக்கு தெரிவிக்கிறார். கையூட்டு பெற்ற கயவர்களென்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. தம் மக்களின் நலம் காக்க விரும்பிய அரசனாக திவான் சமூகத்துக்கு கொடுத்துவந்த காணிக்கையை நிறுத்திவிட்டு தனது நாட்டு மக்களின் பாதுகாபிற்க்காக ஆங்கிலேயரின் பக்கம் திரும்பிவிடுகிறார் ஏழாயிரம் பண்ணை அரசர்.

அடுத்தது சிவகிரி பாளையம். ஏழாயிரம் பண்ணையில் முத்துசுவாமி ஆண்டுகொண்டார் அவர்கள் அரசராக இருந்தபோது சிவகிரி பாளையத்தின் அரசராக இருந்தவருக்கும்(பெயர் தெரியவில்லை) அவரது குமாரருக்கும் பிணக்கு ஏற்பட்டு பாளையக்காரரின் மகனும் அவருடைய மைத்துனன் கறுப்பு வன்னியனும் சிவகிரி பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். கறுப்பு வன்னியன் மட்டும் தம் மனைவியுடன் வந்து ஏழாயிரம் பண்ணை பாளையத்தில் தங்குகிறார்.

ஒரு நாள் தம் மனைவியை மட்டும் விட்டுவிட்டு பக்கத்தில் ஓரிடம் சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற கறுப்பு வன்னியன், பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று, அங்கு யாதோ இரகசியமாய்ப் பேசி முடிவெடுத்துக்கொண்டு, அங்கிருந்து கட்டபொம்மு சேனைகளைக் கூட்டிக்கொண்டு ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் பக்க வழியாக சிவகிரிக்குப் போகிறவன் எளையரசனேந்தலில் இருந்துகொண்டு ஏழாயிரம் பண்ணைக்கு தூது அனுப்பினார்.

அவருக்கு துணையாக ஏழாயிரம் பண்ணை சேனையை அனுப்பவில்லையென்றால், ஏழாயிரம் பண்ணை பாளையத்தை சார்ந்த சில ஊர்களை கொள்ளையிட்டுவிடுவோம் என்று பயமுறுத்திவிட்டு, ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் அம்மையாபட்டியை கொள்ளையிடுகிறார்.

சிவகிரி பாளைத்திற்க்கு எதிராக போரிடுவதற்க்கு தனது படையை அனுப்ப மறுத்து, இவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்க சேனையை அனுப்புகிறார் அரசர் முத்துசாமி ஆண்டுகொண்டார்.

இப்படி அருகிலிருக்கும் பாளையங்களின் பகுதிகளை கொள்ளையடிப்பதுவும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதுவும், அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடுவதுமாக இருந்த ஒருவனுக்கு உதவ பிற பாளையக்காரர்கள் எப்படி முன்வருவார்கள்...!!?

செய்யறதெல்லாம் மொள்ளமாரித்தனமும் முடிச்சவிக்கிதனமும் செஞ்சிட்டு அடுத்தவங்கள குறை சொல்றது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இதுக்கு முன்னாடி கட்டபொம்மனைப் பற்றிய ஒரு தகவல் படிச்சிருந்தேன். அதாவது, கட்டபொம்மன் அதிகமாக கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபடுவதாகவும் எனவே கட்டபொம்மனை கைது செய்து சிறையிலடைக்க ஆணை வழங்கக்கோரி திருநெல்வேலி பகுதி பொருப்பாளராக இருந்த ஒரு வெள்ளைக்காரன் சென்னையில்(Madras) இருந்த தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதம் அது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மனசு அப்போது ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், இப்போது உள்ளூர் தகவல்களே இப்படி கிடைக்கும்போது ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

நன்றி  :
      
1. தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், “வன்னியர்” (வரலாற்று ஆவண நூல்      
       2. தொல்லியல் நிபுனர் திரு. நடன.காசினாதன், “வன்னியர் மாட்சி”
       3. திரு. செல்வமணி, “தென்னிந்திய புரட்சியாளர்கள்”